சமுக உறவில் தேடுங்கள்

Wednesday, May 2, 2012

நெரிசல்

கவிதை வாசிக்க உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.
சுக்கு காபி குடித்தாகிவிட்டது அல்லது குடிக்கப்போகிறோம்.
நாற்காலியில்  வசதியாக சாய்ந்து உட்கார்ந்து கொள்கிறீர்கள்.
அறைக்கு வெளியே சாலையில் இருசக்கர வாகனமொன்று
கிரீச்சென பிரேக் பிடிக்கும் சப்தம் கேட்கிறது.
நாயொன்று வாகனத்தில் அடிபட்டு
ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும் திசைநோக்கி ஓடுகிறது.
அதன் கால் ஒடிந்திருக்கலாம்.
உங்களில் ஒருவர் செல்பேசியை காதில் வைத்தபடி வெளியேறுகிறார்.
ஊரெங்கும் கைப்பேசிகளின் கினுகிணுப்பு திடீரென அதிகரித்துவிட்டது.
ஒலி எழுப்பியபடி வருகிறது ஆம்புலன்ஸ்.
வாகன ஓட்டி இறந்திருக்கலாம்.
என் கால்கள் அத்திசை நோக்கி இழுபட துவங்குகிறது.
நீங்கள் இன்னும் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொள்கிறீர்கள்.
மாமிசத் துணுக்குகளை தேடி அலையும் கருப்பு பறவைகள்
பெரியார் சிலை மீது எச்சமிட்டபடி பறக்கின்றன.
ஆளுங்கட்சியின் அண்ணா சிலையை பராமரிக்க நிறுவனங்களிடையே போட்டி.
போக்குவரத்து நெரிசலாகிவிட்டது.
சாலையில் வாகனங்கள் தத்தமது பாதை கேட்டு பிளிரத் துவங்கிவிட்டன.
காற்றோலிப்பான்களின் அலறல் படியேறிவந்து
உங்களுக்குப் பின்னால் காலியாக இருக்கும் இருக்கையில் உட்கார்ந்து கொள்கின்றன.
நெரிசல் அதிகமாகிவிட்டது.
நீங்கள் மெல்ல நகர்ந்து நெரிசலை தவிர்க்கப் பார்க்கிறீர்கள்.
குறுஞ்செய்தி ஒன்று உங்களை நள்ளிரவு விருந்துக்கு அழைக்கிறது.
நெரிசல் இன்னும் இன்னும் அதிகமாகவே
நீங்கள் ஜன்னல் வழியே குதித்து தப்பிக்கும் வேளையில்
நானும் கவிதை வாசித்தலை நிறுத்திவிட்டு குதிக்க வேண்டியதாயிற்று.
 
- மயூரா ரத்தினசாமி

No comments:

Post a Comment